Published : 27 Apr 2016 12:32 PM
Last Updated : 27 Apr 2016 12:32 PM
தமிழகத்திற்கு 2016-ல் தான் சுதந்திரம் கிடைக்க உள்ளது என தருமபுரியில் நேற்று முன்தினம் இரவு நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசினார்.
தருமபுரி வள்ளலார் திடலில் நேற்று முன்தினம் இரவு, பாமக சார்பில் தருமபுரி மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பாமக-வின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி பேசியது:
வரவிருக்கும் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் அப்புறப்படுத்தி பாமக-வை ஆட்சியில் அமர்த்துங்கள். நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் இரண்டே ஆண்டுகளில் நிறைவேற்றுவேன்.
இந்தியாவிற்கு 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், தமிழகத்திற்கு 2016-ம் ஆண்டில் தான் சுதந்திரம் கிடைக்க உள்ளது. பாமக-வில் தான் இளைஞர் சக்தி அதிகமாக உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து துணிச்சலுடன் போட்டியிடுகிறோம். தமிழகத்தில் நடந்து வரும் மவுனப் புரட்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
முதல்வர், அமைச்சர் பதவியில் உள்ளவர்களை ‘மாண்புமிகு’ என்ற மரியாதையுடன் அழைப்பதை தவிர்க்க வேண்டுமென விரும்புகிறேன். ‘மாண்புமிகு’ போன்ற மரியாதைகள் எதற்கு? பதவியில் அமர்பவர்கள் மக்களுக்கான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமே அன்றி, மரியாதை பட்டங்கள் மூலம் பெருமை பட்டுக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு பேசினார்.
இந்தக் கூட்டத்தில், வேட்பாளர்கள் செந்தில், சத்தியமூர்த்தி, மன்னன், முரளி, மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணன், மாநில நிர்வாகி சாந்தமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT