Published : 11 Mar 2022 04:52 PM
Last Updated : 11 Mar 2022 04:52 PM

 போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக - விஜயகாந்த்

சென்னை: ஏழை, எளிய மக்களுக்காக சேவைபுரியும் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுகிறது. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு போடப்பட வேண்டிய 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமாகின. இதற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தங்களும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என போக்குவரத்து தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் போக்குவரத்து பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக அரசு அளித்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை. ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்புத் தொகை எதவும் வழங்காமல் அவர்களை அலைய விடுவது மிகவும் வேதனையாக உள்ளது.

அரசின் மெத்தனப் போக்கால் ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. எனவே, ஏழை, எளிய மக்களுக்காக சேவைபுரியும் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சிக்கு தொடர்புடைய சங்கத்திற்கு போக்குவரத்து தொழிலாளர்கள் சந்தா செலுத்தி உறுப்பினராக வேண்டும்.

இல்லையென்றால், பேருந்தை விட்டு வேறு வழித் தடத்திற்கு மாற்றுவது, வேறு பணிமனைக்கு இடமாற்றம் செய்வது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், எந்த கட்சி ஆட்சி செய்கிறதோ, அந்த தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனையின் பேரில்தான் நிர்வாகம் நடைபெறுகிறது.

இதனால் அப்பாவி தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு அனைத்து தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்கலாமா வேண்டாமா என எழுத்து மூலம் கருத்து கேட்க வேண்டும். அதன்மூலம் அவர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x