Published : 29 Apr 2016 11:51 AM
Last Updated : 29 Apr 2016 11:51 AM

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் பாஜக அனுமதிக்காது: பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்த அனுமதிக்காது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் பதுக்கப்படும் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யும்போது, எந்த நிறுவனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதோ, அந்த தொழில் நிறுவனத்தின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

வைகோ தேர்தலில் இருந்து ஏன் விலகினார் என்பது குறித்து அவருக்கே தெளிவு இல்லை. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் அவர் விலகியதற்கு அதிர்ச்சியும், சில தலைவர்கள் மகிழ்ச்சியும் தெரிவிக்கின்றனர். இதுவே குழப்பமாக இருக்கிறது. அது மக்கள் நலக்கூட்டணி இல்லை. குழப்பக் கூட்டணி என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மற்ற கட்சிகள் வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான் மக்கள் நலக் கூட்டணி. குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்காவது, திமுக, அதிமுக கட்சிகளை தமிழக மக்கள் ஒதுக்கி வைத்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி பெறும். ஜல்லிக்கட்டுக்கு தேர்தல் நேரத்தில் குரல் கொடுக்கும் இந்த கட்சிகள், தேர்தலுக்கு பின்னரும் ஒன்றும் செய்யப்போவது இல்லை. பாஜக மட்டுமே ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கும் என்றார்.

கெயில் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பில் தொடரப்பட்ட மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து அவரிடம் கேட்ட போது, ‘கண்டிப்பாக, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்த அனுமதிக்காது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x