Published : 11 Mar 2022 08:20 AM
Last Updated : 11 Mar 2022 08:20 AM

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவ, மாணவிகளின் கோரிக்கைளை பரிசீலிப்பது தொடர்பாக ஆலோசனை: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கொத்தவால் சாவடி தெருவில் ரூ.35 லட்சம் மதிப்பில் புதிய உடற் பயிற்சிக் கூடம் மற்றும் ரேஷன் கடையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.35 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை மற்றும் உடற்பயிற்சிக் கூடம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொத்தவால் சாவடி குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள், கொத்தவால்சாவடி தெரு, விலா மரக் குடிசைகள், துரைசாமி தோட்டம், நாராயணசாமி தெரு போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் 2 கி.மீ. தொலைவுக்குச் சென்று ரேஷன் பொருட்களை வாங்கும் நிலை இருந்தது.

இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று 2 ரேஷன் கடைகள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல, இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 2020-21-ம் நிதியாண்டில் சைதாப்பேட்டையில் 6 இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் பணி நேற்று முன்தினம் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டில் இருந்து மீட்டுவரப்பட்ட 1,416 மாணவர்களுக்கு 20 மனநல ஆலோசகர்கள் மூலம் தொலைபேசியில் மனநல ஆலோசனை வழங்குவதுடன், அவர்களது கோரிக்கைகள், தேவைகள் கேட்டறியப்பட்டுள்ளது.

அவர்களது கோரிக்கைகளை பரிசீலிப்பது தொடர்பாக 2 நாட்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், கவுன்சிலர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், எம்.தரன், தா.மோகன்குமார், 10-வது மண்டல அலுவலர் ஜெய்பீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x