

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் அரிய வகை பறவைகள் வேட்டையாடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகச் சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுச்சூழல் அறக்கட்டளையினர் தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில், திருவள்ளூர் வன காவல் நிலைய வனச்சரக அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையிலான வனத் துறையினர் நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அவ்வாய்வில், சட்டத்துக்குப் புறம்பாக வேட்டையாடப்பட்ட காமன் கூட், இந்தியன் மூர்கன், நார்தன் பின்டேல் உள்ளிட்ட பறவை இனங்களைச் சேர்ந்த 28 பறவைகள், இறந்த நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அப்பறவைகளைக் கைப்பற்றிய வனத் துறையினர் வன உயிரின குற்ற வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, பறவைகளை வேட்டையாடிய இருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.