Published : 11 Mar 2022 04:25 AM
Last Updated : 11 Mar 2022 04:25 AM

சிங்கம்புணரியில் தனியார் ஆலை முற்றுகை: தொழிலாளர்கள் - போலீஸார் இடையே தள்ளுமுள்ளு

சிங்கம்புணரியில் தனியார் ஆலை முற்றுகை போராட்டத்தில் தடுப்புகளை மீறி தொழிலாளர்கள் செல்ல முயன்றனர். அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரியில் எம்எம்எப் மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் ஆலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற் சங்கம் அமைத்த 7 தொழிலாளர் களை நிர்வாகம் சென்னைக்கு இடமாறுதல் செய்தது. இதைக் கண்டித்து தொழிலாளர்கள் கடந்த 43 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதையடுத்து மதுரை தொழிலாளர் உதவி ஆணை யாளர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், தொழிலாளர் களின் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். போராட் டத்தில் ஈடுபட்டவர்களை நிபந்தனையின்றி மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என ஆலை நிர்வாகத்துக்கு அறிவுறுத் தப்பட்டது. ஆனால் அதை ஆலை நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது.

இதைக் கண்டித்து நேற்று சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே கந்தர்வக்கோட்டை மார்க்சிஸ்ட் எம்எல்ஏ சின்னத்துரை தலைமையில் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சில தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.

தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிட்டனர். அங்கிருந்த தடுப்புகளை மீறி உள்ளே நுழைய தொழிலாளர்கள் முற்பட்டனர். அப்போது, போலீஸாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதன் பின் தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. டிஎஸ்பி ஆத்மநாதன், சின்னத்துரை எம்எல்ஏ மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழி லாளர்களை பணியில் சேர அனுமதிப்பது, சென்னைக்கு இட மாற்றம் செய்யப்பட்ட தொழிலா ளர்களை மீண்டும் சிங்கம்புணரிக்கு மாற்றுவது குறித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x