Published : 11 Mar 2022 04:00 AM
Last Updated : 11 Mar 2022 04:00 AM

பணிகள் முடிந்தும் 2 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தி.மலை ரயில்வே மேம்பாலத்தை திறக்க வேண்டும்: 4-வது ஆண்டாக பாதிப்பு தொடர்கிறது என மக்கள் வேதனை

திருவண்ணாமலையில் பணிகள் நிறைவு பெற்றும் 2 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம். படம்: இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ரூ.38 கோடியில் கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்று கடந்த 2 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணா சாலை – திண்டிவனம் சாலையை இணைக் கும் வகையில் ரூ.38.74 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. 666 மீட்டர் நீளம் மற்றும் 30 தூண்களை கொண்டது. ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்தாண்டு டிசம்பர் மாதம் நிறைவு பெற்றது. பின்னர், அண்ணா சாலை மார்க்கத்தில் உள்ள சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது.

இதனால், பொங்கல் பண் டிகை பரிசாக ரயில்வே மேம்பாலம் திறக்கப்படும் என திருவண்ணாமலை நகர மக்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திறக்கப் படவில்லை. இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. எனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் ரயில்வே மேம்பாலம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருந்தனர். ஆனாலும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்தும் ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வர வில்லை. இதன் எதிரொலியாக பொதுமக்கள் அவதி 4-வது ஆண்டாக தொடர்கிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “ரயில்வே மேம்பாலம் திறக்கப்படாமல் உள்ளதால், திரு வண்ணாமலை நகரம் பிளவுப்பட்டு உள்ளது. திண்டிவனம் சாலையை சுற்றி வசிக்கும் மக்கள், திருவண் ணாமலைக்கு எளிதாக வந்து செல்ல முடியவில்லை. பெருமாள் நகர் வழியாக சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், வேளாண்மை பொருட்களை வாங்க செல்லும் போது மிகவும் சிரமப்படுகிறோம்.

செங்கம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்ல முடியவில்லை.

அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட பிறகும், ரயில்வே மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், 2 மாதங்களுக்கு மேலாக அடைத்து வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலம் திறக்கப்படாததால் சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் மார்க்கம் செல்லும் வாகனங்கள், அவலூர்பேட்டை சாலை வழியாக செல்வதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

அந்நேரத்தில் போக்குவரத்தை சீரமைக்கக்கூட காவலர் கிடை யாது. எனவே, மக்கள் நலன் கருதி மக்களுக்காக ஆட்சி நடத்துபவர்கள், ரயில்வே மேம் பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” என்றனர்.

இது தொடர்பாக தி.மலை நெடுஞ்சாலைத் துறை தரப்பில் கேட்டபோது, "விரைவில் திறக் கப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x