Published : 08 Apr 2016 08:52 AM
Last Updated : 08 Apr 2016 08:52 AM

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஆட்டோக்களுக்கு பர்மிட் வழங்குவதை நிறுத்தக் கூடாது: தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஏஐடியுசி மனு

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஆட்டோக்களுக்கு புதிய பர்மிட் வழங்குவதை நிறுத்தக் கூடாது என கூறி ஏஐடியுசி சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் 2.30 லட்சம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றில் சென்னையில் மட்டுமே 74 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. அண்டை மாநிலங்களை ஒப்பிடுகைகளில் தமிழகத்தில்தான் ஆட்டோக்கள் அதிகமாக உள்ளன. ஆட்டோ எண்ணிக்கையை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு புதிய பர்மிட் வழங்குவது கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, கடந்த மார்ச் 21-ம் தேதி முதல் மீண்டும் வழங்கப்பட்டு வந்த ஆட்டோ பர்மிட் தற்போது மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (ஏ.ஐ.டி.யு.சி) மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘ஆட்டோ பர்மிட் வழங்குவதை ஒட்டு மொத்தமாக நிறுத்தக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, நீதிமன்றத்தின் நிபந்தனையின்படி ஆட்டோக்களுக்கு புதிய பர்மிட் வழங்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த மார்ச் 21-ம் தேதி முதல் வழக்கமான முறையில் ஆர்டிஓ அலுவலகங்களில் மீண்டும் புதிய பர்மிட்கள் வழங்கப்பட்டு வந்தன. பின்னர் மார்ச் 25-ம் தேதி முதல் ஆட்டோ பர்மிட் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளை கேட்டால், தேர்தல் நடத்தை விதிகளின்படி, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே, தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி பர்மிட் வழங்குவதை நிறுத்தக் கூடாது எனக்கோரி தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் போக்குவரத்து ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x