பேரறிவாளனுக்கு ஜாமீன்: முழுமையான விடுதலைக்கு முன்னோட்டம் - திருமாவளவன்

திருமாவளவன் கோப்பு படம்
திருமாவளவன் கோப்பு படம்
Updated on
1 min read

சென்னை: பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது அவரது முழுமையான விடுதலைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நீண்ட காலமாக இந்தத் தீர்மானத்தின்மீது முடிவு எடுக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருக்கிறார் என்பதை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய போது, இது எம்.டி.எம்.ஏ புலனாய்வு விசாரணையில் இருப்பதால் முடிவெடுக்கவில்லை என ஆளுநர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அந்த விசாரணைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டது.

அதன் பின்னர் இரண்டு மூன்று நாட்களில் முடிவெடுப்போம் என்று ஆளுநர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு அதற்கு மாறாக குடியரசுத் தலைவர் தான் இதை தீர்மானிக்க வேண்டும் என்று பின்னர் ஆளுநர் தரப்பு தனது நிலையை மாற்றிக் கொண்டது. இதன் காரணமாகவே இவ்வளவு காலமாக இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

இன்று (மார்ச் 9) இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றபோது மத்திய அரசின் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் கருணை மனுவை தீர்மானிப்பதில் ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற பிரச்சினை எழுந்துள்ளது. அது தீர்வு காணப்படாமல் இதில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது’ என்று வாதிட்டார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத உச்சநீதிமன்ற அமர்வு பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ள நிலையில் இனிமேலும் முரண்டு பிடிக்காமல் மத்திய அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை முழுமையாக விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பேரறிவாளனுக்கு வழங்கியது போலவே இதில் தொடர்புடைய ஏனைய சிறைவாசிகளுக்கு பரோல் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in