Published : 30 Apr 2016 09:02 AM
Last Updated : 30 Apr 2016 09:02 AM

மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை: ஜி.ராமகிருஷ்ணன் உறுதி

மக்கள் நலக் கூட்டணி தேமுதிக - தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று மதுரையில் பிரச்சாரம் செய்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிரானைட் முறைகேடு களுக்கு அதிமுக, திமுக 2 கட்சி களும்தான் துணை போனவை. கீழவளவு, இடையபட்டி, கீழையூர் ஆகிய ஊர்களில் குத்தகை காலத்துக்குப் பிறகும் குவாரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. திருவாதவூர் கிராமத்தில் மரபு சின்னங்களுக்கு அருகே குவாரிக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இவை அதிமுக ஆட்சி காலத்தில் நடந்தவை.

கிரானைட் முறைகேடுகள் குறித்து 2009-ம் ஆண்டு செய்திகள் வெளியானபோது முதல்வர் கருணாநிதியிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் புகார் அளித்தவர்கள் மீதே அவர் நடவடிக்கை எடுத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் கிரானைட் முறைகேடுகளை வெளி உலகுக்கு கொண்டு வந்தார். கிரானைட் முறைகேடுகளை தடுக்க அதிமுக, திமுக அரசுகள் தவறிவிட்டன. மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைத்தால் மட்டுமே இந்த முறைகேடுகள் குறித்து உண்மையான விசாரணை நடத்த முடியும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் வரும் 4-ம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x