பட்டானூரில் இருந்து ஆரோவில்லுக்கு செம்மண் கடத்தி விற்பனை: முதல்வரின் தனிப்பிரிவுக்கு கிராம மக்கள் புகார்

பட்டானூரில் நாவற்குளம் அருகே அனுமதியின்றி வெட்டியெடுக்கப்படும் செம்மண்.
பட்டானூரில் நாவற்குளம் அருகே அனுமதியின்றி வெட்டியெடுக்கப்படும் செம்மண்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ள பட்டானூரில் இருந்து ஆரோவில்லுக்கு செம்மண் கடத்தி விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்கு வானூர் வட்டாட்சியர் உடந்தையாக இருப்பதாகவும் கிராம மக்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு பட்டானூர் கிராம மக்கள் அனுப்பியிருக்கும் மனுவில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்குட்பட்ட திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் உள்ளது பட்டானூர் வருவாய் கிராமம். மண்வளம் மிக்க இக்கிராமத்தின் அப்பன் சாவடி குட்டை, சமட்டியான் குளம், வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் ஓடை புறம்போக்கில், அரசின் எவ்வித அனுமதியின்றி பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு பள்ளம் வெட்டி, அந்த செம்மண்ணை ஆரோவில் பகுதியில் கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களாக இது நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள கவுன்சிலர் ஒருவரின் கணவருக்குச் சொந்தமான லாரியில், ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் நாளொன்றுக்கு 100 லோடு டிப்பர் லாரிகளில் கொண்டு செல்வதால் சாலைகள் மோசமடைந்துள்ளது.

என்று அந்த மனுவில் கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இதுகுறித்து வானூர் வட்டாட்சியர் உமாமகேஸ்வரனிடமோ, பட்டானூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனுக்கோ புகார் தெரிவித்தால், புகார் தெரிவிக்கும் நபர்கள் குறித்து ஊராட்சித் தலைவருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் மிரட்டப்படுகின்றனராம். இதனால் மக்கள் அவர்களை அணுக முடியவில்லை.மேலும் குட்டைப் புறம்போக்கு நிலங்களை சமன் செய்து, அவற்றை பட்டாவாக மாற்றித் தருகிறோம் எனக் கூறி பணம் பெறுவதாகவும் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ள கிராம மக்கள், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக வானூர் வட்டாட்சியர் உமா மகேஸ்வரனிடம் கேட்டபோது, வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கேட்டுக் கொண்டதன் பேரில் மண் அள்ள அனுமதி அளித்ததாகக் கூறினார். வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமனிடம் இதுபற்றி கேட்டபோது, அதுபோன்று யாருக்கும் நான் கடிதம் கொடுக்கவில்லை.

அங்கு செம்மண் குவாரி இயங்குவதும் தனக்கு தெரியாது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in