ஜெ. மரணம் | ஆறுமுகசாமி ஆணைய விசாரணை மீண்டும் தொடக்கம்; ஆஜரான அப்போலோ மருத்துவர்கள்

ஜெ. மரணம் | ஆறுமுகசாமி ஆணைய விசாரணை மீண்டும் தொடக்கம்; ஆஜரான அப்போலோ மருத்துவர்கள்
Updated on
1 min read

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. இந்த விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எய்ம்ஸ் மருத்துவர்கள் காணொலி மூலம் விசாரணையில் பங்கேற்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், 2019-ல் இந்த வழக்கில் உரிய மருத்துவக் குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த ஆணைத்தின் விசாரணைக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்தது. தற்போது ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ, மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு எய்ம்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மருத்துவர்கள், சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 16-ம் தேதி ஆலோசனை நடத்தியது.

அதைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதன்படி இன்று அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் பாபு மனோகர், அருள்செல்வம், ராமகிருஷ்ணன், சுந்தர் மற்றும் காமேஷ் உள்ளிட்ட 5 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகினர். இந்த விசாரணையின்போது, எய்ம்ஸ் மருத்துவர்களும் காணொலி மூலம் பங்கேற்றிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in