Published : 07 Mar 2022 06:00 AM
Last Updated : 07 Mar 2022 06:00 AM

தொழிற்பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் கிராம மக்கள் வலியுறுத்தல்

திருப்பூர்

அவிநாசி அருகே விளைநிலங்களை கையகப்படுத்தி தொழிற்பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி முதல்வருக்கு மனு அனுப்ப, 3 கிராம மக்கள், விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் என மூன்று ஊராட்சிகளில் உள்ள பட்டா தரிசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் என 846 ஏக்கர் நிலத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க கடந்த 2020-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தொழிற்பூங்கா அமைக்க ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புவிசார் அளவீடு முறையில் சர்வே செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகளை கைவிட்டு ஊழியர்கள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் அவிநாசி- சேவூர் அருகேயுள்ள ஆனைக்கல்பாளையத்தில் தத்தனூர், புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம் பகுதிகளில் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியம், வேலுசாமி தலைமை வகித்தனர். நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு திருப்பூர், ஈரோடு,கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் நிறைவேறும் தருவாயில் உள்ளன. இத்திட்டத்தால் வறண்டு கிடக்கும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி, விளைநிலங்கள் பயன்பெற்று, விவசாயம் செழிக்கும். எனவே, விளை நிலங்கள் அதிகம் உள்ள இந்தப் பகுதிகளில் தொழிற்பூங்காவை அரசு அமைக்கக்கூடாது.

இத்திட்டத்தை கைவிடக் கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மனுக்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x