Published : 06 Mar 2022 06:00 AM
Last Updated : 06 Mar 2022 06:00 AM

8 மாவட்டங்களில் பாஜகவின் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பொறுப்புகள் கலைப்பு: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை

சென்னை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாஜக மாவட்டத் தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளும் முழுமையாக கலைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அங்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி, நாகப்பட்டினம், சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு ஆகிய 8 கட்சி மாவட்டங்களை சீரமைக்கும் வகையில் மாவட்டத் தலைவர், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள், மண்டல் கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகின்றன.

பொறுப்பாளர்கள் நியமனம்

புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதன்படி, திருநெல்வேலி - கட்டளை எஸ்.ஜோதி, நாகப்பட்டினம் - டி.வரதராஜன், சென்னை மேற்கு - டி.என்.பாலாஜி, வட சென்னை மேற்கு - மனோகரன், கோயம்புத்தூர் நகர் - ஏ.பி.முருகானந்தம், புதுக்கோட்டை - செல்வம் அழகப்பன், ஈரோடு வடக்கு - எஸ்.எம்.செந்தில் குமார், திருவண்ணாமலை வடக்கு - சி.ஏழுமலை ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி கட்சி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் நோக்கில் 8 மாவட்டங்களில் சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, அந்த மாவட்ட நிர்வாகிகள் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம் அல்ல. இந்தமாவட்டங்களில் இன்னும் அதிக வெற்றிகளை குவிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x