Published : 06 Mar 2022 06:30 AM
Last Updated : 06 Mar 2022 06:30 AM

‘வணக்கத்துக்குரிய மேயர்’ என அழைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் பரிசீலிப்பார்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை சிவலிங்கபுரத்தில் நேற்று மெகா கரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கிவைத்தார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர்.

சென்னை

தமிழகத்தில் 23-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நேற்று நடைபெற்றது.

கோடம்பாக்கம் மண்டலம் சிவலிங்கபுரத்தில் நடைபெற்ற முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், விருகம்பாக்கம் எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி துணை ஆணையர்கள் எஸ்.மனீஷ், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், மாமன்ற உறுப்பினர்கள் நிலவரசி துரைராஜ், பொ.லோகு, ரவி சங்கர் (எ) ராஜா, ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா, கே.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 22 மெகா முகாம்கள் மூலம் மட்டும் 3 .72 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 91.54 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 72.62 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 83.9 சதவீதம் பேர் முதல் தவணையும், 47.17 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். மேலும், 6.37 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

மாநகராட்சி மேயரை வணக்கத்துக்குரிய மேயர் என்று அழைக்கப்பட்டு வந்த மரபு கடந்த ஆட்சிக் காலத்தில் மாண்புமிகு மேயர் என்று மாற்றி, அரசானை வெளியிடப்பட்டது. தற்போது, மீண்டும் வணக்கத்துக்குரிய மேயர் என்று அழைப்பது குறித்து முதல்வர் பரிசீலிப்பார்.

உக்ரைன் நாட்டிலிருந்து இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 500 மாணவர்கள் பாதுகாப்பாக திரும்பி உள்ளனர். அங்கு, தமிழகத்தை சேர்ந்த 2,200 மாணவர்கள் படித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்த மாணவர்களின் எதிர்கால கல்வி தொடர்பாக, மத்திய அரசு வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x