Published : 06 Mar 2022 06:24 AM
Last Updated : 06 Mar 2022 06:24 AM

தூத்துக்குடி - மேலமருதூர் இடையிலான புதிய அகலப் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை

தூத்துக்குடி -மதுரை இடையே புதிதாக அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து மேலமருதூர் வரை 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிமுடிவடைந்துள்ளது. புதிய ரயில் பாதையை பெங்களூரு தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் நேற்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு 5 மோட்டார் டிராலிகள் மூலம் சென்று அவர் ஆய்வை தொடங்கினார். வழியில் 32 சிறிய, பெரிய பாலங்கள், குமாரகிரி ரயில்வே கேட், ரயில் பாதையில் குறுக்கிடும் பல்வேறு மின் வழித்தடங்கள், பெரிய வளைவுகள் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், மேலமருதூர் ரயில் நிலையத்தில் ஆய்வை நிறைவு செய்தார்.

தொடர்ந்து, பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சிறப்பு ரயிலை 120 கிலோமீட்டர் வேகத்தில் அகலப் பாதையில் இயக்கி அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. மேலமருதூரில் பிற்பகல் 3.23 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் 13 நிமிடங்களில் மீளவிட்டான் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

ஆய்வின்போது, ரயில்வே கட்டுமான தலைமை நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா, முதன்மைப் பொறியாளர் தவமணி பாண்டி, கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x