கோபி நகராட்சித் தலைவர் பதவியை மறுத்த காங்கிரஸ்; போட்டியின்றி தேர்வான திமுக கவுன்சிலர்

கோபி நகராட்சித் தலைவர் பதவியை மறுத்த காங்கிரஸ்; போட்டியின்றி தேர்வான திமுக கவுன்சிலர்
Updated on
1 min read

ஈரோடு: திமுக கூட்டணியில் கோபி நகராட்சித் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியினர் துணைத் தலைவர் பதவியே போதும் என்றதால், நகராட்சித் தலைவராக திமுக கவுன்சிலர் நாகராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில், 14 வார்டுகளில் திமுகவும், இரண்டு வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், அதிமுக 13 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். கூட்டணி அடிப்படையில் கோபி நகராட்சித் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக திமுக தலைமை நேற்று அறிவித்தது. ஆனால், நேற்று இரவு வரை நகராட்சித் தலைவருக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், கடைசி நேரத்தில் தங்களுக்கு கோபி நகராட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்றும், துணைத் தலைவர் பதவியே போதும் என்றும் காங்கிரஸ் ஒதுங்கியது.

இதையடுத்து திமுக நகர செயலாளரும், கவுன்சிலருமான என்.ஆர். நாகராஜ் நகராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து கோபி நகராட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் நிர்வாகியுமான நல்லசாமியிடம் கேட்டபோது, ‘கோபி நகராட்சியில் துணைத்த லைவர் பதவியைத்தான் காங்கிரஸ் கட்சி கோரியிருந்தது. தவறுதலாக தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் திமுகவுக்கே தலைவர் பதவியை கொடுத்து விட்டோம்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in