Published : 24 Jun 2014 08:42 AM
Last Updated : 24 Jun 2014 08:42 AM

சவுகார்பேட்டை வாசனை திரவிய கிடங்கில் தீ: ஒருவர் பலி; கரும்புகையால் மக்கள் மூச்சுத் திணறல்

சவுகார்பேட்டையில் ஒரு தனியார் வாசனை திரவிய கிடங்கில் ஏற்பட்ட தீயினால் கரும்புகை வெளியாகி அருகே வசிக்கும் மக்களுக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

சென்னை சவுகார்பேட்டை நாராயண முதலி தெருவில் 4 தளங்கள் கொண்ட கட்டிடம் உள்ளது. வாசனை திரவியங்கள் விற்பனை செய்யும் சூரியபிரகாஷ் பண்டாரி(40) என்பவர் இந்த கட்டிடத்தின் 2-வது தளத்தை கிடங்காக பயன்படுத்தி வந்தார்.

முதல் தளத்தில் பிளாஸ்டிக் கடைகளும், 2 மற்றும் 3-வது தளங்களில் ஒரு வீடும், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உட்பட 11 கடைகளும், இரு கிடங்குகளும் உள்ளன. திங்கள்கிழமை காலையில் வழக்கம்போல கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு விற்பனை நடந்து கொண்டிருந்த நேரத்தில் பிற்பகல் 2 மணியளவில் சூரியபிரகாஷ் பண்டாரியின் வாசனை திரவிய கிடங்கின் ஒரு பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேப்பேரி, எழும்பூர், கீழ்ப்பாக்கம் பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அது குறுகிய தெரு என்பதாலும், சாலையின் இரு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்தியிருந்ததாலும் தீயணைப்பு வாகனம் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

யானைக்கவுனி காவல் துறையினர் விரைந்து வந்து வாகனங்களை அப்புறப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் தெருவுக்குள் நுழைய முடிந்தது.

தீப்பிடித்த கிடங்குக்குள் வாசனை திரவிய டின்கள், பாட்டில்கள் மொத்தமாக வைக்கப் பட்டிருந்தன. வாசனை திரவியங் கள் தீப்பிடிக்கும் தன்மை உடையவை என்பதால் தீயின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு வெப்பம் அதிகமாக இருந்தது.

பின்னர் கரும்புகை அதிக அளவில் வெளியேறி அந்த பகுதி முழுவதையும் மறைத்து விட்டது. இதனால் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 வீரர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது.

அருகே இருந்த மற்ற தீயணைப்பு வீரர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டு மாடியில் இருந்து தரைக்கு கொண்டு வந்தனர். அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 108 ஆம்புலன்சும் சம்பவ இடத்துக்கு வந்தது.

தீயை அணைக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டாலும் அது ரசாயனத்தால் ஏற்பட்டதீ என்பதால் மீண்டும் தீப்பிடித்தது.

இதனால் ரசாயன தீயை அணைக்கும் நுரையை பாய்ச்சி தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் 2-வது தளத்தில் இருந்து 3, 4-வது தளத்திற்கும் தீ பரவியது. இதனால் ராட்சத ஏணி மூலம் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். அதிக வெப்பத்தால் வாசனை திரவியங்கள் வைக்கப்பட்டிருந்த பாட்டில்கள் வெடித்து சிதறின.

மாலை 6.15 மணிக்கு தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது முற்றிலும் எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் கண்டுடெடுக்கப்பட்டது இறந்தவரின் பெயர் லோகேஷ் (22) என்பதும், அவர் அங்குள்ள கடையில் பணிபுரிபவர் என்பதும் தெரியவந்தது.

யானைக்கவுனி காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ பிடித்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x