Published : 04 Mar 2022 12:25 PM
Last Updated : 04 Mar 2022 12:25 PM

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொகுதியில் ஐந்தில் ஒரு பேரூராட்சியை கைப்பற்றியது அதிமுக

ஈரோடு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியில் அமைந்துள்ள 5 பேரூராட்சிகளில் ஒன்றில் மட்டும் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ.வாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளார். இந்த தொகுதியில் உள்ள கோபி நகராட்சியை திமுக கைப்பற்றிய நிலையில், தொகுதியில் உள்ள 5 பேரூராட்சிகளில், லக்கம்பட்டி பேரூராட்சியை மட்டும் அதிமுக கைப்பற்றியுள்ளது.

லக்கம்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அதிமுக 12 வார்டுகளைக் கைப்பற்றி இருந்ததால், திமுக சார்பில் இந்த பேரூராட்சிக்கு தலைவர் பதவிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதனால், போட்டியின்றி அதிமுக தலைவர் பதவியைக் கைப்பற்றும் என்ற நிலையில், திமுக கவுன்சிலர் சத்யவதி நேற்று தலைவர் பதவிக்கு போட்டிட்டார்.

இதைத் தொடர்ந்து நடந்த மறைமுகத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சண்முக கொடி 12 வாக்குகள் பெற்று தலைவராகத் தேர்வு பெற்றார். இதையடுத்து அவரைத் தலைவர் இருக்கையில் அமரவைத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மற்ற கவுன்சிலர்கள், அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

எலத்தூரில் அதிருப்தி வேட்பாளர் வெற்றி

கோபியை அடுத்த எலத்தூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் நளினா பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். இன்று காலை நடந்த பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில், திமுக வேட்பாளரை எதிர்த்து, திமுக பேரூராட்சி செயலாளர் மணி என்பவரது மருமகள் ராஜேஸ்வரி அதிருப்தி வேட்பாளராக களமிறங்கினார்.

மறைமுக தேர்தல் முடிவில், திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில், அதிருப்தி வேட்பாளராக போட்டியிட்ட திமுக கவுன்சிலர் ராஜேஸ்வரி 9 வாக்குகள் பெற்று தலைவர் பதவியைக் கைப்பற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x