

சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பான்மை இல்லாத தேவகோட்டை நகராட்சியை காங்கிரஸூக்கு திமுக ஒதுக்கியது.
தேவகோட்டை நகராட்சியில் மொத்தமம் 27 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக-10, அமமுக-5, காங்கிரஸ்-6, திமுக-5, சுயேச்சை-1 இடங்களில் வென்றன. பெரும்பான்மை பெற மொத்தம் 14 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. 19-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ஞானம்மாள் திமுகவில் இணைந்தபோதிலும் நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்ற அக்கூட்டணிக்கு போதிய பலம் இல்லை.
ஆனால் அமமுக ஆதரவோடு தலைவர் பதவிக்கு 1-வது வார்டு அதிமுக கவுன்சிலர் சுந்தரலிங்கம் போட்டியிட உள்ளார். அவர்களுக்கு 15 கவுன்சிலர்கள் ஆதரவு இருப்பதால், தேர்தல் நடந்தால் சுந்தரலிங்கம் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
மேலும் அதிமுக, அமமுகவைச் சேர்ந்த 15 கவுன்சிலர்களும் நேற்றுமுன்தினம் ஆளும் கட்சி தரப்பினர் தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாகவும், இதனால் தேர்தலை தள்ளி வைக்காமல் அமைதியாக நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் பெரும்பான்மை இல்லாத தேவகோட்டை நகராட்சியை காங்கிரஸூக்கு திமுக ஒதுக்கியுள்ளது. ‘எங்களது கூட்டணியில் 12 கவுன்சிலர்கள் உள்ளனர். சில கவுன்சிலர்களின் ஆதரவோடு நாங்கள் தலைவர் பதவியை கைப்பற்றுவோம்’ எனக் காங்கிரஸார் நம்பிக்கை தெரிவித்தனர்.