Published : 03 Mar 2022 05:53 AM
Last Updated : 03 Mar 2022 05:53 AM

பட்ஜெட் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மார்ச் 5-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை: பட்ஜெட் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.

தமிழக அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட், வரும் 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுநாள் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னதாக பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவசாயிகள், வணிகர் சங்கங்கள், தொழில் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுடன் துறை வாரியாக அமைச்சர்கள் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் காகிதம் இல்லாத இ-பட்ஜெட்டாக மின்னணு வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது. அதேபோல், வேளாண் பட்ஜெட்டும் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் சில முக்கியமான திட்டங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுதற்போது வரை செயல்படுத்தப்படாத திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் வரும் 5-ம் தேதி நடக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலர்,நிதி, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்க உள்ளனர்.

தலைமைச் செயலர் ஆலோசனை

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, மார்ச் 9 முதல் 12-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு நடக்க உள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ள இந்தக் கூட்டத்தில், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள், சட்டம் - ஒழுங்கு நிலவரம் ஆகியவை குறித்து மாவட்ட வாரியாக கேட்டறிந்து, அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்க உள்ளார்.

இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். இதில் அனைத்து துறைகளின் செயலர்களும் பங்கேற்கின்றனர். மாவட்டஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்துஇன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும், மாவட்டங்கள்தோறும் திட்டசாதனை குறித்தும் தகவல் பெறப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x