புதுச்சேரி to பெங்களூருவுக்கு மீண்டும் விமான சேவை - மார்ச் 27 முதல் தொடக்கம்

புதுச்சேரி to பெங்களூருவுக்கு மீண்டும் விமான சேவை - மார்ச் 27 முதல் தொடக்கம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு மார்ச் 27-ல் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. ஹைதராபாத்துக்கு தொடங்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் 2015-ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனமும் புதுச்சேரியில் இருந்து பெங்களூரூக்கு விமான சேவையை தொடங்கின. ஆனால், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் இச்சேவைகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

மத்திய அரசு நாட்டில் விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில் புதிய விமான கெள்கையை அறிவித்தது. அதன்படி உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க விமான நிறுவனங்களுக்கு பாதிக் கட்டணத்தை, மத்திய அரசே ஏற்கும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது.

அத்திட்டத்தில் சேர்ந்து புதுச்சேரியில் இருந்து தடைப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் துவக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.

கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஹைதராபாத்திற்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்தை தொடர்ந்து, மீண்டும் பெங்களூரூக்கு விமான சேவை தொடங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி மீண்டும் சேவையை தொடங்கியது. அதன்பின்னர் பெங்களூர் விமான சேவை நிறுத்தப்பட்டது. கரோனா காலத்தில் விமான சேவைகள் முற்றிலும் இல்லாமல் போனது. தற்போது புதுவையிலிருந்து விமானத்தை இயக்க ஆறு விமான நிறுவனங்கள் தயாராக உள்ளனர்.

இந்நிலையில், இச்சேவைகள் எப்போது தொடங்கும் என்று அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டதற்கு, "புதுவையிலிருந்து பெங்களூரு, ஹைதரபாத்துக்கு விமான சேவை இயங்கியது. மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு டெண்டர் விட்ட காலம் முடிவடைந்தது. இப்போது மீண்டும் விமான சேவையை வரும் 27-ம் தேதி தொடங்க உள்ளோம். புதுவையிலிருந்து பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்கும். அடுத்த வாரத்திலிருந்து டிக்கெட் முன்பதிவு தொடங்கும். ஹைதராபாத்துக்கு விமான சேவை தொடங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in