திமுக கட்சிக்காரன் எனக்கூறி மிரட்டி ஓசி பிரியாணி கேட்டவர் மீது உணவக உரிமையாளர் புகார்

திமுக கட்சிக்காரன் எனக்கூறி மிரட்டி ஓசி பிரியாணி கேட்டவர் மீது உணவக உரிமையாளர் புகார்
Updated on
1 min read

சென்னை: சென்னை அயனாவரம் மார்க்கெட் சாலை பகுதியை சேர்ந்தவர் நாகூர்கனி (33). இவர் அயனாவரம் யு.ஐ. நகரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக துரித உணவகம் (பாஸ்ட் புட்) நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சில நாட்களாக கே.கே நகரைச் சேர்ந்த சேகர் என்பவர் இந்த கடைக்கு சென்று, தான் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறி பிரியாணி, பரோட்டாவை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நாகூர்கனி பணம் கேட்கும்போது திமுக நிர்வாகியிடமே பணம் கேட்கிறாயா என்று மிரட்டல் விடுத்தாராம்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் துரித உணவகத்துக்கு சென்ற சேகர், பிரியாணி கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் நாகூர்கனி பணம் கேட்டுள்ளார். அவரை சேகர் தகாத வார்த்தையால் திட்டியதோடு, கடையை நடத்தவிடாமல் செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த நாகூர்கனி, இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘சேகர் வேறு ஒரு கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்துள்ளார். கட்சியில் பெரிய அளவில் எந்த பொறுப்பையும் அவர் வகிக்கவில்லை. நாகூர்கனி அளித்த புகார் குறித்து விசாரணை நடக்கிறது’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in