

'சந்திரகுமார் செய்தது பச்சை துரோகம். இதைவிட விஜயகாந்துக்கு பாலில் விஷம் கொடுத்திருக்கலாம்' என்று மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
''அதிமுகவும் இன்னொரு கட்சியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து அழைக்கிறது. அடுத்த முறை அதிமுகவில் எம்எல்ஏ சீட் கொடுத்து, அமைச்சராக்குவேன் என்று உறுதி தருகிறது. ஆசை வார்த்தை காட்டுவது, பணத்தைக் கொடுப்பது, கட்சியை விட்டு வா என்கிறது.
திமுகவுடன் கூட்டணி வைத்தால் விஜயகாந்த் நல்லவர் என்று திமுக சொல்லும். வராததால் தேமுதிகவை உடைக்க முயற்சிக்கிறது.
சந்திரகுமாருக்கு சமீபத்தில்தான் பணப்பட்டுவாடா நடந்திருக்கும். 3 நாட்களில் அதிமுகவையும், திமுகவையும் தாக்கிப் பேசியவர் இப்போது விஜயகாந்துக்கு எதிராக நிற்பது பச்சை துரோகம். இதைவிட விஜயகாந்துக்கு பாலில் விஷம் கொடுத்திருக்கலாம். சோற்றில் விஷம் போடுவார்கள். நாங்கள் நம்பியவர்களுக்கு தலையைக் கொடுப்போம். உயிரையும் கொடுப்போம்.
இந்த மாதிரியான கீழ்த்தரமான வேலையை கருணாநிதியும் செய்யலாம். கட்சிகளை உடைப்பது திமுக தலைவர் கருணாநிதிக்கு கைவந்த கலை. அது அவரது ரத்தத்தில் ஊறியது. ஆனால், அவரது எண்ணம் ஒரு போதும் ஈடேறாது'' என்றார் வைகோ.