Published : 01 Mar 2022 08:07 PM
Last Updated : 01 Mar 2022 08:07 PM

ஜெயக்குமார் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பிப்ரவரி 19-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20-ம் தேதி ஜெயக்குமார் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "என்மீது புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. எனவே, என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தது தவறானது. நரேஷ்குமாரின் மருத்துவ அறிக்கையைிலும் அவருக்கு காயங்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்நிலையில், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று, ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டுமென முறையீடு செய்தனர். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஜெயக்குமாரின் மனுவை வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x