இணைப்புக் கால்வாய் திட்டம் - அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

இணைப்புக் கால்வாய் திட்டம் - அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு
Updated on
1 min read

சென்னை: தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புக் கால்வாய் திட்டப் பணிகள் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதால், ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்காக தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறுகளை இணைக்க 2006-ம் ஆண்டு தமிழக அரசு திட்டமிட்டது. 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனவே, அதை விரைவுப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திமுக எம்எல்ஏவாக இருந்தபோது மு.அப்பாவு பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசு தாக்கல் செய்த அட்டவணையின்படி, பணிகளை முடிக்கும்படி 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என தமிழக அரசுக்கு எதிராக 2017-ம் ஆண்டு, அப்பாவு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், 4 கட்டங்களாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் முதல் இரண்டு கட்டங்கள் முடிவடைந்துள்ளதாகவும், மூன்றாவது கட்டத்தில் 90 சதவீதமும், நான்காவது கட்டத்தில் 50 சதவீதமும் பணிகள் முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள், அரசு தாக்கல் செய்த அட்டவணைப்படி பணிகளைக் கண்காணிக்க வேண்டுமென அறிவுறுத்தல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த உத்தரவும் 2015-ம் ஆண்டில் பிறப்பிக்கப்படவில்லை என்பதால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாகாது என தெரிவித்து, அப்பாவு தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in