

சென்னை: அரசு உத்தரவின் அடிப்படையில் ஏரியின் ஒரு பகுதி மயானமாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்த வழக்கில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'எங்கள் ஊரில், ஒரு ஏக்கர் பரப்பளவிலான செங்குட்டை என்ற ஏரி உள்ளது. இந்த ஏரிதான், மோட்டுப்பட்டி மற்றும் ஆலமரத்தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வேளாண் நிலங்களுக்கு நீராதாரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், செங்குட்டை ஏரியின் ஒரு பகுதியை மயான பூமியாக மாற்றம் செய்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், மோட்டுப்பட்டி மற்றும் ஆலமரத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் இறந்துபோனால், அவர்களின் உடலை ஏரிப்பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்கவும், ஏரி நிலத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, சத்திகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.