

ஊத்தங்கரை தனியார் பள்ளியில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 45 ஆயிரம் பணம் மற்றும் 245 கிராம் தங்க நாணயங்கள் சிக்கின. இது தொடர்பாக வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங் கரையில் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு வழங்க பணம், நகைகள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக நேற்று முன்தினம் இரவு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் நேற்று காலை ஊத்தங்கரை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயகுமாரி, டிஎஸ்பி பாஸ்கரன், வட்டாட்சியர் அமுதன் ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பள்ளி அலுவலகத்தில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கம், தலா ஒரு கிராம் எடையுள்ள 245 தங்க நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பள்ளி நிர்வாகத்துக்குச் சொந்தமான கல்லூரியிலும், தாளாளர் சந்திரசேகரன் அறை யிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கிருஷ்ணகிரி, ஓசூரில் இருந்து 2 வாகனங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் வந்து, பள்ளியின் தாளாளர் சந்திரசேகரனிடம் விசா ரணை நடத்தினர். இது குறித்து பள்ளி தரப்பில் விசாரித்த போது, “பள்ளி, கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2 மாதம் சம்பளம் வழங்கு வதற்காக பணம் வைக்கப் பட்டுள்ளது. மேலும், பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் நன்றாக பணியாற்றிய ஆசிரியர் களை ஊக்குவிக்கும் வகையில் தங்க நாணயங்கள் வழங்க வைத்தி ருந்தோம். பள்ளியின் வளர்ச்சி பிடிக்காத சிலர் தேவையற்ற வதந்திகளை பரப்பி உள்ளனர். பணம், நகைகளுக்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன” என்றனர்.