Published : 28 Feb 2022 05:07 AM
Last Updated : 28 Feb 2022 05:07 AM

156 ஆண்டு கால வரலாறு கொண்ட கடலூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார்? - திமுகவில் பலத்த போட்டி

கடலூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார் என்பதில் திமுக நிர்வாகிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாநகராட்சி 09.03.1993முதல் தேர்வு நிலை நகராட்சி யாகவும், 02.12.2008 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 45 வார்டுகளைக் உள்ளடக்கிய நிலையில், கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அன்னவல்லி, நத்தப்பட்டு உள்ளிட்ட 19 ஊராட்சிகளை இணைத்து2021 ஆகஸ்டு 25-ம் தேதி மாநக ராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

156 ஆண்டு கால வரலாறு கொண்ட கடலூர் நகர்மன்ற தலைவர்களாக சுப்ராயலு ரெட்டியார்,சுந்தரம்செட்டியார், தங்கராஜ முதலியார், தாமோதரன் முதலி யார், பாஷையம் ரெட்டியார், சுப்ரமணியன், தங்கராசு, ஏ.ஜி. ராஜேந்திரன்,சி.கே.சுப்ரமணியன் போன்றோர் கடலூர் நகரசபை பதவியை அலங்கரித்தவர்களில் குறிப்பிடத்தக் கவர்கள்.

தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலை எதிர்கொண்ட கடலூர்மாநகராட்சியை 30 உறுப்பினர்களின் வலுவோடு திமுக கைப் பற்றியுள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்கள் என்பதால் மேயர் திமுகவுக்கு என முடிவாகிவிட்டது. ஆனால் அந்த பெண் மேயர் யார் என்பதில் பலத்த போட்டி நிலவுகிறது. மாநகராட்சி தேர்தலில் திமுக நகரச் செயலாளர் ராஜா, அவரது மனைவி சுந்தரியோடு களமிறங்கனார். இருவரும் தனித்தனியாக 2 வார்டுகளிலும் போட்டியிட்டாலும் சுந்தரி மட்டுமே வெற்றிபெற்றுள்ளார். தற்போது அவர் தன் மனைவிக்கே மேயர் பதவி வழங்கவேண்டும் என மாவட்டச் செயலாளரான அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தையே சுற்றி வருகிறார்.

மற்றொருபுறம் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.குணசேகரன், 2-வது வார்டில் வெற்றிபெற்ற பொறியாளர் பட்டதாரியான தனது மனைவி கீதாவுக்கு மேயர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மேயர் பதவியை கைப்பற்ற இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், துணை மேயர் தங்களுக்கு வழங்கவேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகோரிக்கை வைத்துள்ளது. ஆனால்திமுக மாவட்டச் செயலாளரான அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமோ 17-வது வார்டில் வெற்றிபெற்ற சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த ஜா.கிரேசி அல்லது 31-வது வார்டில் பெற்ற ஷாய்துன்னிசா ஆகிய இருவரில் ஒருவரை பரிசீலிக்கிறாராம்.

இந்த நிலையில் நேற்று கடலூரில் திமுக மாவட்ட செயற் குழுக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கட்சியினரிடம் கேட்டபோது, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் யாரை மனதில் வைத்திருக்கிறார் என்பது கடைசி தருணத்தில் தான் தெரியவரும் என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x