

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க தடை விதிக்கக் கோரி, அப்பகுதியை சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி, பரத சக்ரவர்த்தி அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
அப்போது, ‘அந்த பகுதி விவசாய நிலம் என்பதால் டாஸ்மாக்மதுபானக் கடை திறக்கப்போவது இல்லை. சட்ட விதிகளின்படி உரிய இடத்தில் மதுபானக்கடை அமைக்க அனுமதி வழங்கப்படும்’ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘விவசாய நிலங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அமைக்க அனுமதிக்க கூடாது’ என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.