

`திருநெல்வேலியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமியின் ஆன்மா மன்னிக்குமா?’ என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திருநெல்வேலி திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனை ஆதரித்து நேற்று அவர் பேசியதாவது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 7,630 கொலைகள், 3,473 பாலியல் பலாத்காரம், 8,119 கொள்ளைகள் நடைபெற்றுள்ளன. 11,845 பேர் கொலை முயற்சிகளில் இருந்து தப்பியிருக்கிறார்கள். திருநெல்வேலியில் நேர்மையான வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. ஜெயலலிதா, அமைச்சர் மற்றும் அதிகாரிகளை, அவரது ஆன்மா மன்னிக்குமா? என்று பொதுமக்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
மதுவிலக்கு அமல்
பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் டிபிஎம் மைதீன்கானை ஆதரித்து மேலப்பாளையத்தில் அவர் பேசியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்தால் மேலப்பாளையம் சந்தைப்பகுதியில் கழிவுநீர் வெளியேற வசதி, அரசு மருத்துவமனை மேம்பாடு, புதிய காய்கனி சந்தை, குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டங்களை செயல்படுத்துவோம் என்றார் அவர்.
சாலையில் கொட்டப்பட்ட தண்ணீர்
ஸ்டாலினின் பிரச்சாரம் செய்த மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் 2 லாரிகளில் கொண்டுவரப்பட்ட தண்ணீரை சாலைகளில் கொட்டினர். அங்கு திரண்டவர்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இந்த ஏற்பாட்டை செய்திருந்தனர். மாநகரில் பல்வேறு இடங்களில் குடிநீருக்கு மக்கள் அவதியுறும் நிலையில் சாலையில் தண்ணீரை லாரி லாரியாக கொட்டியது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது.