Published : 26 Feb 2022 01:13 PM
Last Updated : 26 Feb 2022 01:13 PM

வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்காக தமிழக அரசுக்கு கடிதம், மின்னஞ்சல், ட்விட்டர் மூலம் மக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்

சென்னை

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகளின் நலனை பாதுகாத்து, அவர்களின் வருவாயை உயர்த்தும் வகையில் முதல் முறையாக கடந்த 2021-22- ம் ஆண்டில் வேளாண்மைக்கு என தனியாக நிதிநிலை அறிக்கையை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இது, விவசாயிகள் மட்டுமல்லாது, வேளாண் சார்ந்த பல்வேறு பிரிவு மக்களின் பாராட்டை பெற்றது. கடந்தாண்டைப் போன்று வரும் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது.

முதல்வர் அறிவுறுத்தல்

நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் முன்னர், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் என பல்வேறு வகையான பிரிவுகளைச் சார்ந்த மக்களின் கருத்துகளை கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, பிப். 23-ம் தேதி தலைமைச் செயலகத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துகேட்புக் கூட்டம்அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட வேளாண்மையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டறியும் வகையில், மாநிலத்தில் கருத்துகேட்புக் கூட்டங்கள் விரைவில் நடத்தப்படவுள்ளன. காணொலி காட்சி வாயிலாகவும் கருத்து கேட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறைதீர் கூட்ட கருத்துகள்

மாவட்டம்தோறும் ஆட்சியர்கள் தலைமையில் விவசாயிகளின் குறைதீர் நாட்களில் பெறப்பட்ட விவசாயிகளின் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கூட்டத்தில் பங்கேற்க இயலாதவர்கள் தங்கள் கருத்துகளை, அரசுக்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் தொலைபேசி எண் அல்லது இதர சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கலாம். கடிதத்தை, வேளாண்மை உற்பத்தி ஆணையர், வேளாண் துறை, தலைமைச் செயலகம், புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை – 600 009 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும், agrisec@tn.gov.in அல்லது agrips@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 93848 76300 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமும், ‘@ agridept_tn’ என்ற இணைப்பில் ட்விட்டர் மூலமும், ‘உழவன் ஆப்’-இல் “பட்ஜெட் கருத்துகள்” என்ற சேவையின் கீழும் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x