

சென்னை: "நாகூர் தர்கா நிர்வாகத்தை 4 மாதங்கள் நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாக குழு, 4 ஆண்டுகளாக தொடர்வது ஏன்?" என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாகூர் தர்கா நிர்வாக முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தர்கா நிர்வாகத்தை கவனிக்க நான்கு மாத காலத்துக்கு என்ற அடிப்படையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி அக்பர் அடங்கிய தற்காலிக நிர்வாக குழுவை நியமித்து 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில், முஹாலி முத்தவல்லி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தது.
கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து தர்காவின் தற்காலிக நிர்வாக குழு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வக்பு வாரியம் தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்கப்பட்டு, அதுதொடர்பான தகவல் தற்காலிக நிர்வாக குழுவுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், தர்காவின் நிதியை தவறாக பயன்படுத்தி இந்த மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
இதையடுத்து, 4 மாதங்கள் செயல்படுவதற்காக நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாக குழு, இன்னும் தொடர்வது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் தற்காலிக நிர்வாகக் குழுவை கலைப்பது குறித்து மார்ச் 10-ம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டனர். அதுவரை தர்கா விவகாரங்களை மேற்கொள்ள கூடாது என்று தற்காலிக நிர்வாக குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், தர்காவுக்காகவும், தற்காலிக நிர்வாக குழுவுக்காகவும் மேற்கொண்ட செலவு விவரங்களை தாக்கல் செய்ய தற்காலிக நிர்வாகக் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தற்காலிக குழு செய்துள்ள செலவு விவரங்களை தாக்கல் செய்ய வக்பு வாரியத்துக்கும் உத்தரவிட்டனர்.
இந்த மேல் முறையீட்டு வழக்கு செல்லாததாகி விட்டதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தற்காலிக நிர்வாக குழுவுக்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை மார்ச் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.