

புதுச்சேரி: "புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையின்றி, ஒருநாள் மட்டுமே நடத்தியிருப்பது சரியில்ல" என முன்னாள் முதல்வர் நாராயண்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "முதல்வர் ரங்கசாமி கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆட்சி அமைந்து 9 மாதங்களாகியும் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளுக்கு முதல்வர் சென்று ஆய்வுக் கூட்டம் நடத்தவில்லை.
புதுவை அரசுடன் இணக்கமாக உள்ள ஆளுநர், மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து ஏன் நிதி பெற்று தரவில்லை? ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்கள், வளர்ச்சி திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு சொகுசு வாகனங்கள் வாங்கி உலா வருகின்றனர். இதுதான் ஆட்சியின் சாதனையா?
புதுவை அரசு 2021- 22 பட்ஜெட்டில் அறிவித்த ரூ.9,900 கோடியில் இதுவரை 40 சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ளது. நடப்பாண்டிற்கான நிதி நிலையை நிறைவு செய்ய இன்னும் 40 நாட்கள் மட்டுமே இருக்கிறது. எஞ்சிய 40 நாட்களில் எப்படி 100 சதவீத நிதியை செலவு செய்ய முடியும்? புதுவை நிதிநிலை சம்பந்தமாக வெள்ளை அறிக்கையை முதல்வர் வெளியிட வேண்டும்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளுநர் உரையோடுதான் ஆரம்பிக்க வேண்டும். அதை மாற்றி, ஒரு நாள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தியது சரியில்ல" என்று நாராயாணசாமி கூறியுள்ளார்.