Published : 23 Feb 2022 06:49 AM
Last Updated : 23 Feb 2022 06:49 AM

திமுகவில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்ட தாய், மகன் வெற்றி

தாம்பரம்

தாம்பரம் மாநகராட்சியில் திமுகவில் சீட் கிடைக்காததால், அதிகாரப்பூர்வமான கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக தாய், மகன் களமிறங்கி, இருவரும் வெற்றிக்கனியைப் பறித்துள்ளனர்

தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள் உள்ளன. இங்கு திமுகவில் உள்ளூர் செல்வாக்கு உள்ளவருக்கும், முன்னாள் கவுன்சிலர்கள் பலருக்கும் சீட் மறுக்கப்பட்டது.

தாம்பரம் 39-வது வார்டில் கிரிஜா சந்திரன் திமுகவில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் 1,879 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். கிரிஜா சந்திரன் ஏற்கனவே 2 முறை அதே பகுதியில் கவுன்சிலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இவரது மகன் ஜெயபிரதீப் சந்திரன் 40-வது வார்டில் போட்டியிட்டார். இவர் 2,470 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வார்டில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ ராஜா ஆகியோர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது தாய், மகனை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனாலும், மக்கள் செல்வாக்கு இருந்ததால் தாய், மகன் இருவரும் வெற்றி பெற்றனர்.

கணவன், மனைவி வெற்றி

தாம்பரம் மாநகராட்சி 56-வதுவார்டில் பெருங்களத்துார் பேரூராட்சியில் தொடர்ந்து 4 முறை தலைவராக பதவி வகித்த சேகர் என்பவரும், 57-வதுவார்டில் அவரது மனைவி கமலா சேகர் ஆகியோரும் திமுக சார்பில் போட்டியிட்டனர்.

முடிவில், சேகர் 2,418 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கமலா 2,583 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x