Published : 23 Feb 2022 05:58 AM
Last Updated : 23 Feb 2022 05:58 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியீடு; கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் திமுக கூட்டணி அமோகம்: கடலூர் மாநகராட்சியையும் பெரும்பான்மையுடன் கைப்பற்றியது- நகராட்சி, பேரூராட்சிகளிலும் அபாரம்

விழுப்புரம்/ கடலூர்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நகர்ப்புறஉள்ளாட்சித் தேர்தலில் திமுககூட்டணி அமோக வெற்றி பெற் றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 303 இடங்களையும், விழுப்புரம் மாவட்டத்தில் 138 இடங்களையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 115 இடங்களையும் திமுக கூட்டணி பெற்றிருக்கிறது.

கடலூர் மாநகராட்சியையும் திமுக வென்றுள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. தொடர்ந்து கடந்த 28-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை வேட்புமனுதாக்கல் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டி வனம், விழுப்புரம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள், வளவ னூர், செஞ்சி, அனந்தபுரம், மரக்காணம், விக்கிரவாண்டி, திருவெண்ணைநல்லூர், அரகண்டநல்லூர் 7 பேரூராட்சிகள் என 210 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி மற்றும் திருவெண்ணைநல்லூரில் முறையே ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து 208 பதவிகளுக்கு 933 பேர் போட்டியிட்டனர். கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை 10 மையங்களில் 101 சுற்றுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பிற்பகலில் நிறைவு பெற்றது.

மொத்தம் உள்ள 210 இடங்களில் 130 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. 33 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. மார்க்சிஸ்ட் 1, தேமுதிக 1, காங்கிரஸ் 5, அமமுக 1, பாமக 6, விடுதலை சிறுத்தைகள் 2 மற்றும் 31 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பிற்பகலுக்குள் முடிவுக்கு வந்தது. மின்னணு வாக்குப்பதிவினால் வாக்கு எண்ணிக்கை விரைவாக முடிவடைந்ததாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி

இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை ஆகிய 3 நகராட்சிக ளுக்கும், சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், மணலூர்பேட்டை, வடக்கனந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கும் என 153 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

மங்கலம்பேட்டையில் சுயேச்சைகள் ஆதிக்கம்

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சியில் சுயேச்சை உறுப்பினர்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்று தனி முத்திரைப் பதித்துள்ளனர்.

இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 8 வது வார்டில் திமுக உறுப்பினர் சம்சாத்பேகம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 14 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 4,6,7,10,11,12,13 வார்டுகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர திமுக-4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது. மங்கலம்பேட்டையில் அதிகளவு சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் திமுக ஆதரவு நிலையையே எடுக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது. இதில் சங்கராபுரம், வடக்கனந்தல், சின்னசேலம் பேரூராட்சிகளில் 12 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 141 கவுன்சிலர் பதவிகளுக்கு 534 பேர் போட்டியிடனர். கடந்த 19-ம் தேதி வாக்குப் பதிவு முடிந்து நேற்று காலை 8 மணிக்கு 4 மையங்களில் 54 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், பிற்பகல் 12.30 மணி அளவில் நிறைவடைந்தது.

மொத்தமுள்ள 153 கவுன்சிலர் பதவிகளில் திமுக 112 இடங்களிலும், அதிமுக 24 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி,நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தா சலம்,வடலுார், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலை நகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி,கெங்கைகொண்டான், பெண்ணாடம், முஷ்ணம், சேத்தியாதோப்பு,லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம்,கிள்ளை என 14 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதம் உள்ள 437 பதவிகளுக்கு 1,994 பேர் போட்டியிட்டனர். கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

66 இடங்களில் அதிமுக வெற்றி

நேற்று காலை 14 மையங்களில் 247 சுற்றுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பிற்பகலில் நிறைவு பெற்றது. தேர்தல் நடைபெற்ற 437 இடங்களில் 273 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. 66 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது.

மார்க்சிஸ்ட் 4, தேமுதிக 6, காங்கிரஸ் 12, அமமுக 2, பாமக 6 , விடுதலை சிறுத்தைகள் 15, பாஜக 2, மதிமுக 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, முஸ்லிம் முன்னேற்ற கழகம் 6 மற்றும் 65 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

காலை 8 மணிக்குத் தொடங் கியவாக்கு எண்ணிக்கை பிற்பகலுக்குள் முடிவுக்கு வந்தது. மின்னணு வாக்குப்பதிவினால்வாக்கு எண்ணிக்கை விரைவாக முடிவடைந்ததாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புவனகிரி பேரூராட்சியில் 4 வது வார்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இயங்காததால், அந்த வார்டில் மட்டும் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x