Published : 22 Feb 2022 05:35 PM
Last Updated : 22 Feb 2022 05:35 PM

மறுவாக்குப்பதிவு நடந்த தி.மலை 25-வது வார்டு: 137 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வீழ்த்திய சுயேச்சை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சியில் மறு வாக்குப்பதிவு நடைபெற்ற 25-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ஸ்ரீதேவி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 137 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டு பெரும்பாக்கம் சாலை, ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் பழனி. திமுக பிரமுகரான இவர், தனது மனைவி ஸ்ரீ தேவிக்கு, திமுக சார்பில் 25-வது வார்டில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் வாய்ப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், 25-வது வார்டில் சுயேச்சையாக ஸ்ரீதேவியை களம் இறக்கினார். மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளருக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில், சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீ தேவிக்கு சாதகமான சூழல் நிலவியதாக கூறப்படுகிறது. வெளிநபர்கள் மூலம் கள்ளவாக்கு போடப்பட்டுள்ளது என கூறி, மறு வாக்குப்பதிவு நடத்த வலியுறுத்தி திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, 25-வது வார்டில் மறு வாக்குப்பதிவு நடத்த தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, 21-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. 1,590 வாக்குகளில் 1,193 வாக்குகள் பதிவானது. இதையடுத்து இன்று திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சையாக போட்டியிட்ட ஸ்ரீதேவி, 648 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் முனியம்மாள் 511 வாக்குகளை மட்டும் பெற்ற நிலையில், 137 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்ரீ தேவி வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஸ்ரீதேவிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரான பார்த்தசாரதி வழங்கினார்.

இதனிடையே, 25வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மண்மேகலை 8 வாக்குகளும், பாஜக வேட்பாளர் சுகந்தி 21 வாக்குகளும் பெற்றும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x