Published : 22 Feb 2022 01:07 PM
Last Updated : 22 Feb 2022 01:07 PM

கரோனா பணிகளுக்காக கிடைத்த கவுரவம்: ஈரோடு மாநகராட்சி 40-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ரமேஷ்குமார் வெற்றி

சுயேட்சை வேட்பாளர் ரமேஷ்குமார்

ஈரோடு: கரோனா காலத்தில் மக்களுக்கு பெருமளவில் உதவிகள் செய்த காரணத்தினால் சுயேச்சை வேட்பாளர் ரமேஷ்குமார் என்பவரை 40-வது வார்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி 40-வது வார்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி வேட்பாளர்களைத் தோற்கடித்து சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த வார்டில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த முகமது ஆரிப், அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் அன்புத்தம்பி இரட்டை இலைச் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

இந்த வார்டில் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ்குமார் போட்டியிட விருப்ப மனு செய்திருந்தார். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தீப்பெட்டி சின்னத்தில் சுயேச்சையாக அவர் போட்டியிட்டார். இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களைத் தோற்கடித்து சுயேச்சை வேட்பாளர் ரமேஷ்குமார் 1,210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் பதிவான 4,554 வாக்குகளில், சுயேச்சை வேட்பாளர் ரமேஷ்குமார் 2,443 வாக்குகளையும், அவருக்கு அடுத்தபடியாக தமாகா வேட்பாளர் 1,233 வாக்குகளையும் பெற்றுள்ளனர். திமுக கூட்டணி வேட்பாளர் 622 வாக்குகள் பெற்றுள்ளார்.

மக்கள் சேவை மையம் என்ற அமைப்பினை நடத்தி வரும் ரமேஷ்குமார், கரோனா காலத்தில் இப்பகுதி மக்களுக்கு பெருமளவில் உதவிகளைச் செய்தது வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x