

சென்னை: சிவகாசி மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் நகராட்சி அதிமுக செயலாளர் பொன் சக்திவேல் தாக்கல் செய்த மனுவில், 'சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்கும் கடந்த 19-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஆளும் திமுகவினர் முறைகேடுகளிலும், விதிமீறலிலும் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், முறையாக வாக்கு எண்ணிக்கை நடத்தாமல் திமுக வினரை வெற்றி பெற்றதாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதால், மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்’ என்று மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
மனுவுக்கு எண்ணிடும் நடைமுறை முடிந்தால் பிற்பகல் விசாரிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். இதேபோல வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மேலும் சில முறையீடுகள் முன்வைக்கப்பட்டன. மனுத்தாக்கல் செய்யாமல் இந்த முறையீடுகளை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.