Published : 21 Feb 2022 10:08 AM
Last Updated : 21 Feb 2022 10:08 AM

மறுவாக்குப்பதிவு: சென்னை வண்ணாரப்பேட்டையில் காலை 9 மணி நிலவரப்படி 41 வாக்குகள் மட்டுமே பதிவு

மதுரை திருமங்கலத்தில் வாக்களிக்க வந்த பெண் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

சென்னை: தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாடிகளில் இன்று காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் காலை 9 மணி நிலவரப்படி 41 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 51-வது வார்டு, புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள 1174 -வது எண் வாக்குச்சாவடியில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 41 வாக்குகளே பதிவாகியுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் 900க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில் மிகவும் குறைந்த அளவிலேயே வாக்குப்பதிவாகியுள்ளது.

இதேபோல், 179-வது வார்டு பெசன்ட்நகர் ஓடைக்குப்பத்தில் உள்ள 5059-வது எண் வாக்குச்சாவடியில் காலை 10 மணி நிலவரப்படி 196 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

கடந்த 19 ஆம் தேதி நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 43.65 % மட்டுமே வாக்களித்தனர். சென்னையில் வாக்குப்பதிவு தொடர்ந்து குறைவாகவே இருப்பது பேசுபொருளாகியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி 16 வது வார்டுக்கு மறு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் காலை 10 மணி நிலவரப்படி 15% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 17-வது வார்டில் காலை 7 மணி தொடங்கி பலத்த பாதுகாப்புக்கு இடையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி 31% வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருவண்ணாமலை வார்டு எண் 25ல் 2 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் மறு வாக்குப்பதிவில் காலை 10 மணி நிலவரப்படி 28.05% வாக்குப்பதிவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x