Published : 03 Apr 2016 08:52 AM
Last Updated : 03 Apr 2016 08:52 AM

ஜனநாயக நாட்டில் வாக்குரிமை மிக வலிமையானது: மதுரை ‘வாக்காளர் வாய்ஸ்’ விழாவில் ஆட்சியர் கருத்து

ஜனநாயக நாட்டில் வாக்குரிமை மிக வலிமையானது என மதுரை மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தெரிவித்தார்.

‘தி இந்து’ மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வழங்கும் ‘வாக்காளர் வாய்ஸ்- மாணவர் திருவிழா’ மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. ‘தி இந்து’ முதுநிலை உதவி ஆசிரியர் முருகேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மதுரை ஆட்சியர் கொ.வீரராகவராவ்:

ஜனநாயக நாட்டில் வாக்குரிமை மிக வலிமையானது. வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்தினால் ஜனநாயகத்தின் பெருமையை நீட்டித்துக் கொண்டு செல்ல முடியும். ஒவ்வொருவரும் தங்களின் வாக்குரிமையை கடமையாக நிறைவேற்ற வேண்டும். மாணவர்கள்தான் தேர்தல் ஆணைய தூதுவர்கள். மாணவர்கள் அனைவரும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து, ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மதுரை கூடுதல் ஆட்சியர் ரோகிணி ராமதாஸ்:

வாக்குரிமை முக்கியமானது. இந்த உரிமையை, அனைவரும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.நூறு சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். மாணவர்கள் ஆசை, கனவுகளை குடும்ப நலனுக்காக மட்டும் இல்லாமல், நாட்டின் நலனுக்காகவும் இருக்க வேண்டும். அதற்கு மே 16-ம் தேதி அனைவரும் கட்டாயம் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

நெல்லை கோட்ட வணிகவரித் துறை இணை ஆணையர் தேவேந்திரபூபதி:

தமிழகத்தின் தலையெழுத்து மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை வாக்குரிமைக்கு உண்டு. தமிழகத்தில் இந்த தேர்தலில் 1.20 கோடி புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்த வாக்காளர்களில் இது 22 சதவீதம் ஆகும். இதில் 5 சதவீதம் பேர் வாக்களித்தாலே பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர்:

தேர்தல் அதிகாரிகள் தற்போது தினமும் மாணவர்களை சந்தித்து தேர்தல் விழிப்புணர்வு அளித்து வருகிறார்கள். மாணவர்கள், தேர்தல் நாள் அன்று முடியாத மாற்றுத்திறனாளிகளை வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு அழைத்துவர உதவ வேண்டும்.

மாணவர்களிடம் நாளிதழ் வாசிப்பு பழக்கம் இருந்தால் மட்டுமே அரசியல், சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

விருதுநகர் எழுத்தாளர் மணிமாறன்:

வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் தமிழர்கள் உலகத்துக்கே முன் உதாரணமாக இருக்க வேண்டும். வரிசையில் நின்று வாக்களிக்க 10 நிமிடம் தயங்கினால் அடுத்த 5 ஆண்டுகள் நாம் நினைத்ததுபோல் அமையாது.

‘தி இந்து’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ்:

இன்றைக்கு நம்மை வந்தடைந்திருக்கும் வயது வந்தோருக்கான வாக்குரிமை என்பது சுதந்திர இந்தியா, தனது குடிமக்களுக்கு கொடுத்த மிக முக்கியமான ஜனநாயகப் பரிசு. ஜனநாயக ஆயுதம். பல மேற்கத்திய நாடுகள், நமக்குப் பின்னர்தான் இந்த உரிமையை தமது குடிமக்களுக்கு வழங்கினர். ஒரு ஓட்டு, என்ன மாற்றத்தை உருவாக்கி விட முடியும் என்று நிறைய பேர் பேசுகிறோம். 2004 மக்களவைத் தேர்தலில் லட்சத்தீவில் வெறும் 71 ஓட்டுகளில் தோற்றவர் உண்டு. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் சந்தேமாரஹள்ளி தொகுதியில், ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவரும் உண்டு. சூதாடிகள்தான், யார் ஜெயிப்பர் எனப் பார்த்து, ஜெயிக்கும் பக்கம் பந்தயம் கட்டுவர். ஒரு குடிமகன் மாற்றத்துக்கான வேட்பாளர்களைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர சூதாடிகளாக மாறிவிடக் கூடாது என்றார்.

மாணவ, மாணவிகளிடம் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேரு யுவகேந்திரா கலைக் குழுவினரின் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி, கட்டைக்கால் மனிதரின் ஓட்டுரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.

சரியான வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறோம்: மாணவர்கள்

கனிசெல்வன், பிபிஏ இரண்டாம் ஆண்டு:

கடந்தமுறை, முதல் முறையாக வாக்களித் தேன். அப்போது வாக்குரிமை, தேர்தல் பற்றிய விழிப்புணர்வு இல்லை. இப்போது ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் பேசியதில் இருந்து வாக்குரிமையின் முக்கியத்துவம் புரிந்தது. இனி எனது வாக்கை சரியான நபரைத் தேர்ந்தெடுக்க பதிவு செய்வேன்.

அழகர்ராஜா. பிஎஸ்சி முதலாம் ஆண்டு:

அரசியல் மோசமானது இல்லை. அரசியலில் விழிப்புணர்வு ஒரு நாட்டு மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது. ஒருவர் தனது வாக்கை பதிவு செய்வதை பொறுத்து அவரது வாழ்க்கை அமைகிறது. ஒருவரின் உரிமை அரசியல் மூலமே கிடைக்கிறது.

கார்த்திகா, முதலாம் ஆண்டு சிஐடி:

அரசியலில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறைவாக இருக்கிறது. எந்த துறை என்றாலும், பெண்களை ஒதுக்கி வைத்துதான் செய்கின்றனர். வகுப்பறைகள் முதல் சமூகம் வரை பெண்களுக்கென்று ஒரு அரசியல், ஆண்களுக்கென்று தனி அரசியல் இருக்கிறது. அதிகமான பெண்கள் அரசியலுக்கு வந்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும்.

பிரபு சுந்தர் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு:

மாணவர்களாகிய நாங்கள் இன்றைக்கு சரியான வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறோம். ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு. ‘தி இந்து’ அதை சரியாகச் செய்கிறது. இதற்கு மாணவர்கள் சார்பில் தலைவணங்குகிறோம். ‘தி இந்து’ பல நல்ல விஷயங்களை முன்னெடுக்கிறது. மேலும், சில விஷயங்களை அதனிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். ஏனைய பத்திரிகைகளுக்கு இந்த கலாச்சாரம் பரவ வழிவகுக்க வேண்டும். மாணவர்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். சாதி ஒழிப்பு விவாதங்களை பெரிய அளவில் மேற் கொள்வது, சமூகங்களிடையே பதற்றத்தை உருவாக்கும் விஷயங்களை தவிர்ப்பது, மாணவர்களை குறிவைத்து நடத்தப்படும் சண்டை சூட்சமங்களை தவிர்ப்பது போன்ற பணிகளில் ‘தி இந்து’ ஈடுபட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x