Last Updated : 20 Feb, 2022 05:45 PM

 

Published : 20 Feb 2022 05:45 PM
Last Updated : 20 Feb 2022 05:45 PM

தகுதியுள்ள அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் மாத உதவித் தொகை: புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல்

கோப்புப் படம்

புதுச்சேரி: அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு மாத உதவித்தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

கல்லுாரியில் சட்டப்படிப்பினை முடித்து வெளி வரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலை அணுகி, நிரந்தர சான்றிதழ் பெற பதிவு செ ய்ய வேண்டும். நிரந்தர பதிவுச்சான்றிதழ் பெற, பதிவு செய்த 2ஆண்டுக்குள் தேசிய அளவிலான வக்கீல்கள் குழும தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போது தான் பார் கவுன்சிலின் நிரந்தர சான்றிதழ் கிடைக்கும். அதன் பிறகு இளநிலை வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டு காலம் பயிற்சி பெற வேண்டும்.

கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள், வழக்கறிஞராக பணியாற்ற குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகளாகும். இந்த காலகட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமை நிலையில் உள்ளனர். சிலர் வேறு தொழிலுக்குச் செல்கின்றனர். இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் புதுவை அரசு புது திட்டத்தை அமல்படுத்தியது.

இதன்படி இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சமாக 25 வக்கீல்களுக்கு மட்டுமே நிதி வழங்க விதி உருவாக்கப்பட்டது. இதனிடையே, அந்த விதியை மாற்றி தகுதியுள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நிதி வழங்க கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து 25 பேருக்கு மட்டும் உதவித்தொகை என்ற வரையறையை புதுவை அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்காக சட்டத் துறை வாயிலாக அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இனி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த இளம் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 5 ஆயிரம் மாத உதவித்தொகை கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x