Published : 20 Feb 2022 06:30 AM
Last Updated : 20 Feb 2022 06:30 AM

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுக்கான இலங்கையுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

வங்கக்கடலில் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை; இவற்றுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 44 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி வரும் நிலையில், மேலும் 6 மீனவர்களை கைதுசெய்திருப்பது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும், அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய அதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும். மீனவர்சிக்கலுக்கு தீர்வு காண இருதரப்பு மீனவர்களிடையிலான பேச்சுக்களை விரைவில் தொடங்குவதென அண்மையில் நடந்த இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இருதரப்பு பேச்சுக்களை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x