Published : 19 Feb 2022 05:37 PM
Last Updated : 19 Feb 2022 05:37 PM

இயந்திரம் கோளாறு, குடிபோதையில் ரகளை... - வேலூர் வாக்குச்சாவடியில் இரண்டரை மணி நேரம் வாக்குப்பதிவு பாதிப்பு

குடிபோதையில் வாக்குச்சாவடி பகுதியில் ரகளை செய்தவர்களை அப்புறப்படுத்திய காவல்துறையினர். | படங்கள்: வி.எம்.மணிநாதன்

வேலூர்: வேலூரில் இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு செய்ய வரிசையில் காத்திருந்த வாக்காளர்களிடம் ரகளையில் ஈடுபட்ட குடிபோதையில் இருந்த சிலரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு அமைக்கப்பட்டுள்ள 90-வது வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 445 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், பிற்பகல் 2 மணியளவில் திடீரென பழுதானதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இதனால், வாக்காளர்கள் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, சிலர் குடிபோதையில் வாக்குச்சாவடி மையத்தினுள் நுழைந்து தகராறு செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாக்காளர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், குடிபோதையில் இருந்தவர்களை வாக்குச்சாவடி பகுதியில் இருந்து வெளியேற்றினர்.

இதனையடுத்து, பழுதான இயந்திரம் சீல் வைக்கப்பட்டு, புதிய வாக்குப்பதிவு இயந்திரம் மாலை 4.15 வரவழைக்கப்பட்டு, அனைத்து கட்சி மற்றும் சுயேச்சை முகவர்கள் முன்னிலையில் மாற்றப்பட்டு, வாக்குப்பதிவு 4.40 மணிக்கு தொடங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x