தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழப்பு; அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை நிறைவு: 3 மாதங்களில் அரசிடம் இறுதி அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவ ம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் (நடுவில்) செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவ ம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் (நடுவில்) செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். படம்: என்.ராஜேஷ்
Updated on
2 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்தது. விசாரணை அறிக்கை 3 மாதங்களுக்குள் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி போராட்டங்கள் நடைபெற்றன. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்துக்கான அலுவலகம் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டது.

36 கட்ட விசாரணை

ஆணையத்தின் முதல் விசாரணை கடந்த 9.8.2018 அன்றுதொடங்கியது. பல்வேறு தரப்பினரிடம் 36 கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சிதலைவர்களில் நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான் ஆஜராகி சாட்சியம் அளித்தார். நடிகர் ரஜினிக்கு ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அவர் வழக்கறிஞர் மூலம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அப்போது பணியில் இருந்த தலைமைச் செயலர், உள்துறை செயலர், பொதுத்துறை செயலர், ஆட்சியர், டிஜிபி, ஏடிஜிபிஎன முக்கிய அதிகாரிகள் பலரும் சாட்சியம் அளித்தனர்.

ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த ஆண்டு மே 14-ம்தேதி சமர்ப்பித்தார். இடைக்காலஅறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருந்தன. அதன்படி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 93 பேருக்கு தலாரூ.1 லட்சம், கைது செய்யப்பட்டு சிறையில் இறந்த நபரின் தாயாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது. உயிர்இழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்பட்டது.

விசாரணை நிறைவு

கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற ஒருநபர் ஆணையத்தின் விசாரணை நேற்றோடு நிறைவடைந்தது. இதுதொடர்பாக ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆணையத்தின் 36-வது கட்டவிசாரணை கடந்த 14-ம் தேதிதொடங்கி, பிப்ரவரி 18 வரை நடைபெற்றது. இதுவரை ஆணையம் சார்பில் மொத்தம் 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில், 1,048பேர் ஆஜராகி சாட்சியம் அளித்துஉள்ளனர்.

மொத்தம் 1,544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. விசாரணை அறிக்கை தயார்செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுஉள்ளன. 3 மாதங்களுக்குள் இறுதி விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும். திருப்திகரமாக விசாரணையை நிறைவு செய்துள்ளோம் என்றார் அவர்.

ஆணையத்தின் சிறப்பு அலுவலர் பாண்டுரங்கன், விசாரணை அலுவலர் உதயன், பிரிவு அலுவலர் அமுதா உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in