Published : 05 Apr 2016 11:23 AM
Last Updated : 05 Apr 2016 11:23 AM
கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த வாசன், "சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். அதன் பின்னர் தமாகா போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும்" என்றார்.
காங்கிரஸிலிருந்து விலகி தமாகாவை தொடங்கிய வாசன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டார். இதற்காக கட்சி தொடங்கிய கடந்த 15 மாதங்களில் அதிமுக அரசை விமர்சிப்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், 234 தொகுதிகளுக்கான வேட் பாளர் பட்டியலை முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டார். அதில் கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. திமுகவிலும் கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டுவிட்டது. இதனால் தமாகாவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் வாசன் நேற்று இரவும் தொடர்ந்து இன்று காலையும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் மூத்த தலைவர்கள் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவசர ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன் "சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். அதன் பின்னர் தமாகா போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT