

சென்னை: தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சியில் மூன்று வார்டுகளுக்கு மறுதேர்தல் அறிவிக்க கூடாது என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சியில் தேர்தலை ரத்து செய்து கடந்த 7-ம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பேரூராட்சியில் உள்ள மூன்று வார்டுகளின் சுயேச்சை வேட்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பேரூராட்சியின் முதலாவது வார்டு சுயேச்சை வேட்பாளர் எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா, இரண்டாவது வார்டு சுயேச்சை வேட்பாளர் ராஜேஸ்வரி, 11-வது வார்டு வேட்பாளர் சிவகுமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், ’மூன்று வார்டுகளிலும் திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஜெயராஜ், சண்முகலட்சுமி, சின்னதுரை ஆகியோரின் வேட்புமனுக்களை முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு பரிசீலனையின் போது மூன்று வார்டுகளிலும் முன்மொழிந்ததாக கூறப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் மூன்று திமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
வேறு வேட்பாளர்கள் இல்லாத நிலையில் தங்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்காமல், ஒட்டுமொத்த பேரூராட்சியின் தேர்தலையும் ரத்து செய்து பிப். 7-ம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. அரசியல் நிர்பந்தம், நெருக்கடி காரணமாக தேர்தலை ரத்து செய்துள்ளனர். எனவே மூன்று வார்டுகளின் தேர்தலை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். தங்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம், கடம்பூர் பேரூராட்சி தேர்தல் அதிகாரிகள் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர். அதுவரை வழக்கில் சம்பந்தப்பட்ட கடம்பூர் பேரூராட்சியின் மூன்று வார்டுகளுக்கு மறு தேர்தல் அறிவிப்பு வெளியிடக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.