Published : 30 Apr 2016 05:45 PM
Last Updated : 30 Apr 2016 05:45 PM

மீனவர்கள் 34 பேருடன் 88 படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை கடற்படையினர் கைது செய்த 34 மீனவர்கள் மற்றும் அவர்களது 88படகுகளை விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று எழுதிய கடிதத்தில், ''ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து 3 பாரம்பரிய மீன்பிடி படகுகளில் சென்ற 21 மீனவர்களை, கடந்த 27-ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கொண்டு சென்றுள்ளனர். இதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்கும் போது தான் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா - இலங்கை இடையில் கடந்த 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், சர்வதேச கடல் எல்லை என்பது முடிந்துவிட்டதாக மத்திய அரசு கருதக்கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இலங்கை வசம் ஏற்கனவே, 85 படகுகள் மற்றும் 13 மீனவர்கள் உள்ளனர். நீண்டகாலமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகள் பயன்படுத்த முடியாமல் சேதமடைந்துவிட்டன. இதனால், ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டள்ளது. எனவே, இந்த படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை மீட்டு அவற்றை சீரமைத்து விரைவில் மீன்வர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைக்கிறேன்.

மேலும், இலங்கை வசம் தற்போதுள்ள 34 மீனவர்கள் மற்றும் 88 படகுகளை விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x