Published : 18 Feb 2022 03:57 PM
Last Updated : 18 Feb 2022 03:57 PM

நீலகிரி மலை ரயில் பாதை - யானைகள் வழித்தடத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்: உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவு

சென்னை: நீலகிரி மலை ரயில் பாதையில் உள்ள யானைகள் வழித்தடத்தில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் மற்றும் கட்டிடக் கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக வனத்துறையும், ரயில்வே துறையும், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துபேசி உரிய நடைமுறைகளை வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானைகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீலகிரி மலை ரயில் பாதையின் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த சுவர் இடிக்கப்பட்டுவிட்டதாகவும், கட்டிட இடிபாடுகள் இன்னும் அகற்றப்படவில்லை எனவும் தமிழக முதன்மை தலைமை வனபாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் அப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, கட்டிட இடிபாடுகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் அப்புறப்படுத்துவது தொடர்பாக வனத்துறையும், ரயில்வே துறையும், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துபேசி உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பின்னர், வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக வன பயிற்சி கல்லூரி முதல்வர் ராஜ்மோகன் மற்றும் வைகை அணை நக்ஸல் தடுப்பு படை கூடுதல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ் ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவில் நியமிக்க வனத்துறை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ கண்காணிப்பாளர் நிர்மலாதேவி, ஐந்து வழக்குகளை விசாரித்து இரு வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வனக்குற்றங்கள் தொடர்பான வழக்கில், கேரள வனத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x