

ரயில் பயணிகளிடம் அநாகரீகமாக நடந்து, அத்துமீறி பணம் பறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மூன்றாம் பாலினத்தவர் களுக்கு ரயில்வே காவல் துறை யினர் எச்சரிக்கை விடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலை யங்கள், பேருந்து நிலையங்களில் மூன்றாம் பாலினத்தினர் அதிக அளவில் சுற்றித்திரிகின்றனர். ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் மூன்றாம் பாலினத்தினர் சில நேரங்களில் பயணிகளை மிரட்டியும், அடாவடி செய்தும் பணத்தை பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக, ஓடும் ரயிலில் பயணிகளிடம் பணம் கேட்டு மூன்றாம் பாலினத்தினர் அறுவறுக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவதாகவும், வட மாநிலங் களில் இருந்து வரும் ரயில் பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக ரயில்வே காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்ட வர்கள் தொடர்ந்து புகார் தெரி வித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் மூன்றாம் பாலினத்தினர் களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி தலைமை வகித்தார். ரயில்வே பாதுகாப்புப்படை பிரிவு ஆய் வாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். இதில், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மூன்றாம்பாலினத்தினர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் காவல் துறையினர் பேசும்போது, ‘‘ஓடும் ரயில்களில் பயணிகளிடம் மிரட்டும் தொணியில் சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், பணம் கொடுக்க விரும்பாத பயணிகளை தகாத வார்த்தைகளால் திட்டுவது, அவர்களிடம் அநாகரீக செயல் களில் ஈடுபடுவது என மூன்றாம் பாலினத்தினர் மீது தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
மேலும், ரயில் நிலையங்களில் எல்லைகளை பிரித்துக்கொண்டு பணம் வசூலில் ஈடுபடுவதாகவும், சில இடங்களில் மூன்றாம் பாலினத்தினர் போல வேட மணியும் ஆண்களும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக காவல் நிலையங்களில் அதிகமாக புகார் வரப்பெற்றுள்ளன.
சமுதாயத்தில் மூன்றாம் பாலினத்தினர் கவுரவமாக வாழவும், வருமானத்துக்காக சுய தொழில் செய்யவும், படித்த மூன்றாம் பாலினத்தினர்களுக்கு வங்கி மூலம் கடன் உதவிகள், இலவச தொழிற் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட தொழில் மையத்தை அணுகி தங்களுக்கான சலுகைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
அதையெல்லாம் தவிர்த்து, பொதுமக்களை தொந்தரவு செய்து, அவர்களிடம் வலுக்கட்டாயமாக பணம் பறித்து பிழைப்பு நடத்துவது குற்றமாகும். தர்மம் என்பது ஒருவர் தானாக விரும்பி இயலாதவர்களுக்கு வழங்குவதாகும். கேட்டோ, மிரட்டியோ, தட்டிப்பறித்தோ பெறுவது தர்மம் ஆகாது. ஆகவே, பொதுமக்கள், பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. ரயில் நிலையங்களில் இது போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபடுவது தெரியவந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப் படும்’’ என எச்சரித்தனர்.